இந்து திருமணச் சட்டம் – பிரிவு 11&13 – முதல் கணவர் காணாமல் போய், அவர் குறித்து எந்த தகவலும் 7 ஆண்டுகள் வரை இல்லாததால் மனைவி 2வது திருமணம் செய்து கொண்டால் அந்த 2வது திருமணம் சட்டப்படி செல்லுமா? என்று பார்த்தால், வாழ்க்கை துணைவரில் ஒருவர் உயிரோடு உள்ளாரா? என்கிற சங்கதி 7 ஆண்டுகளுக்கும் மேலாக மற்றொரு வாழ்க்கை துணைவருக்கு தெரியாத நிலையில், இந்து திருமணச் சட்டம் பிரிவு 13ன் கீழ் விவாகரத்து பெறுவதற்கான காரணங்களில் ஒன்றாக ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் 7 ஆண்டுகள் வரை ஒரு வாழ்க்கை துணைவர் பற்றி எந்த தகவலும் இல்லாத நிலையில் மற்றொரு வாழ்க்கை துணைவர் 2வது திருமணம் செய்து கொண்டால் அந்த திருமண உறவில் சிக்கல்கள் ஏற்படும். 7 ஆண்டுகள் வரை ஒரு வாழ்க்கை துணைவர் உயிரோடு உள்ளாரா? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை என்று கூறுகிற நபர் தான் அவருடைய கூற்றினை இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 108ன் படி முதலில் நிரூபிக்க வேண்டும். அதன்பிறகு அந்த வாழ்க்கை துணைவர் அந்த காலகட்டத்தில் உயிருடன் இருந்தார் என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு காணாமல் போன வாழ்க்கை துணைவருக்கு ஏற்படுகிறது. எனவே கணவர் காணாமல் போய் 7 ஆண்டுகளாக எந்த தகவலும் இல்லை என்பதற்காக 2வது திருமணம் செய்யக்கூடாது. அவ்வாறு 2வதாக திருமணம் செய்ய வேண்டும் என்றால் காணாமல் போன விபரத்தை கூறி தகுதி வாய்ந்த நீதிமன்றத்தின் மூலமாக விவாகரத்து பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் வெறுமனே வாழ்க்கை துணைவர் 7 ஆண்டுகளாக காணாமல் போய் விட்டதால் 2வது திருமணம் செய்து கொண்டதாக கூறுவதை ஏற்க முடியாது. மேலும் அவ்வாறு செய்த திருமணம் சட்டப்படி செல்லாது என பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. F. A. O. NO – 246-M /2009 & F. A. O. NO – 309-M/2003, DT – 03.08.2015, சவர்ன்ஜித் கவுர் Vs LT. COL. அவதார் சிங் மற்றும் பலர் (2016-2-DMC-478)







